ADDED : ஆக 06, 2025 07:59 AM
பாட்னா : பீஹாரில், பள்ளி வளாகத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி போட்ட 20க்கும் மேற்பட்ட மாணவியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பீஹாரில் பங்கா மாவட்டத்தின் அமர்பூரில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க, அரசு பரிந்துரைத்த ஹெச்.பி.வி., எனப்படும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கடந்த 2ம் தேதி போடப்பட்டது.
தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில், 20க்கும் மேற்பட்ட மாணவியருக்கு வயிற்று வலி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவியரை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவியர் அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாணவியரின் பெற்றோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'இதுபோன்ற தடுப்பூசி போடும்போது உடல்நலக்குறைப்பாடுகள் ஏற்படக்கூடும். இதனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.