ஒரே ஆண்டில் 201 வழக்குகள் பதிவு; கேரள ஊழல் தடுப்புப்பிரிவு அதிரடி
ஒரே ஆண்டில் 201 வழக்குகள் பதிவு; கேரள ஊழல் தடுப்புப்பிரிவு அதிரடி
ADDED : ஜன 03, 2026 03:54 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், கடந்த ஆண்டில் மட்டும் 201 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் என, 76 பேர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நடவடிக்கை
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 'ஊழலற்ற கேரளா' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடந்த ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு தீவிரப்படுத்தியது.
இதன்படி, ஓராண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை:
கேரளாவின் ஊழல் தடுப்புப் பிரிவு, 2025ம் ஆண்டில் மட்டும் 201 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இவற்றில் பொறி வைத்து பிடித்ததில், மொத்தம் 57 வழக்குகளில் 76 பேரை கைது செய்துள்ளோம். இதில் அதிகபட்சமாக வருவாய் துறை அதிகாரிகள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக உள்ளாட்சி துறை மீது 12 வழக்குகளும், போலீஸ் துறையில் ஆறு வழக்குகளும் பதிவாகி உள்ளன. கல்வித்துறை மற்றும் மின் துறையில் தலா மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர பல்வேறு துறைகளில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிராந்திய வாரியாக அதிகபட்சமாக, எர்ணாகுளத்தில் உள்ள மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 28 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அரசு அலுவலகங்களில் ஊழலுக்கு வழிவகுப்பதில் இடைத்தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாக இடைத்தரகர்களை கைது செய்வதில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிக கவனம் செலுத்தியது.
முறைகேடு
இது தவிர ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க, மாநிலம் முழுதும் 1,152 ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் மூலம், கடந்தாண்டில் மட்டும் 14.92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

