பெங்களூரில் 215 அடி உயர கம்பம் ஜன., 26ல் தேசிய கொடி ஏற்ற முடிவு
பெங்களூரில் 215 அடி உயர கம்பம் ஜன., 26ல் தேசிய கொடி ஏற்ற முடிவு
ADDED : ஜன 17, 2024 01:25 AM

விஜயநகர் : பெங்களூரு விஜயநகரில், 215 அடி உயரத்திலான கொடி கம்பம் நிறுவும் பணி நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு விஜயநகரின் சந்திரா லே - அவுட்டில், 215 அடி உயரத்தில் கொடி கம்பம் நடும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக, கொடி நிறுவும் ஒப்பந்தம் பெற்றுள்ள ஹேமந்த் கூறியதாவது:
ஜெயநகரின் சந்திரா லே - அவுட்டில், 210 அடி உயரத்தில் கொடி கம்பமும், அதன் மேல் பகுதியில் ஐந்து அடியில் அசோக சின்னம் என 215 அடியில் நடப்படுகிறது. இதன் எடை 19 டன்னாகும்.
தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா, தனது எம்.எல்.ஏ., நிதியில் இருந்து நிதி ஒதுக்கி உள்ளார். தேசிய கொடி சட்டப்படி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, தேசிய கொடி மாற்றப்படும்.
காற்றால் கொடி சேதமடைந்தாலோ அல்லது கிழிந்து போனால், புதிய கொடி மாற்றப்படும். கொடியை மேலே ஏற்றவும், இறக்கவும், 8 எம்.எம்., இரும்பு ஒயர், மூன்று எச்.பி., மோட்டாருடன் இணைக்கப்படும்.
இப்பணி முடிந்ததும், இதை பராமரிக்கும் பொறுப்பு, பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த டிசம்பர் மாதம் கொடி கம்பம் நடுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. வரும் 25ம் தேதிக்குள், கொடி கம்பத்தை சுற்றிலும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா கூறுகையில், ''எனது எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இங்கு நடப்பட்டுள்ள கொடி கம்பத்தின் மேல்புறத்தில், நான்கு சிங்க தலைகள் பொருத்தப்படும். இதை, பக்கத்து தொகுதியில் இருப்பவர்களும் அங்கிருந்தபடியே பார்க்கலாம்,'' என்றார்.
இதுபோன்று பெங்களூரு தேசிய மிலிட்டரி அருங்காட்சியகத்தில் 213 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு உள்ளது. ஆனால், கொடியை பராமரிக்காதது, ஹைட்ராலிக் இயந்திரத்தை இயக்க குழு அமைக்கவில்லை என ஏற்கனவே அரசு மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயநகரில் அமைக்கப்பட்டு வரும் 215 அடி உயர கொடி கம்பம். இடம்: சந்திரா லே - அவுட், பெங்களூரு.

