ADDED : செப் 27, 2024 02:13 AM
திருச்சூர்,
கேரளாவில் பட்டப்பகலில் நகை வியாபாரியிடம் கத்தி முனையில் இரண்டரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கேரளாவின் திருச்சூரில் உள்ள கிழக்கேகோட்டாவைச் சேர்ந்தவர் அருண் சன்னி. தங்க நகை வியாபாரியான இவர், தன் நண்பர் ரோஜி தாமசுடன் கோவை சென்றார்.
அங்கிருந்து கார் ஒன்றில் இருவரும் 2.5 கிலோ தங்க நகையுடன் நேற்று முன்தினம் திருச்சூர் திரும்பினர்.
திருச்சூர் - பாலக்காடு இடையே கட்டப்பட்டுள்ள குதிரான் சுரங்கப்பாதை அருகே அவர்கள் பயணித்த கார் சென்றபோது, மேலும் மூன்று கார்களில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்தனர்.
கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அருண் மற்றும் ரோஜியை தாக்கிய அவர்கள், இருவரையும் வலுக்கட்டாயமாக வேறொரு காரில் ஏற்றினர்.
புதுாரில் அருணையும், பாலியேக்கரையில் ரோஜியையும் இறக்கிவிட்ட அவர்கள், தங்க நகைகள் இருந்த காருடன் மாயமாகினர்.
இது தொடர்பாக அருண் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் குதிரான் சுரங்கப்பாதை அருகே உள்ள கண்காணிப்பு கேமரா, அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.