ADDED : மே 12, 2026 06:38 AM

புதுடில்லி: கடந்த 2014 முதல் 2025 வரை 2,996 பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளதாக ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐ.சி.ஏ.ஆர்., தலைமையில் வேளாண் ஆராய்ச்சி அமைப்புகள் செயல்படுத்தும் தேசிய வேளாண் ஆராய்ச்சி திட்டம் வாயிலாக, பருவநிலை மாற்றத்தை தாக்குப்பிடிக்க கூடிய 2,996 பயிர் ரகங்கள் 2014 - 2025 காலகட்டத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், நேரடி நெல் விதைப்பு, உழவு இல்லாத கோதுமை சாகுபடி, காலநிலை அபாயங்களை தாங்கும் பயிர்களுக்கு மாறுதல், பயிர் கழிவு மேலாண்மை போன்ற வேளாண் பொருளியல் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டு, பருவநிலை மாற்ற அபாயங்களை போக்குவதற்காக அவை விவசாயிகள் இடையே ஊக்குவிக்கப்பட்டன.
வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற கடுமையான காலநிலைகளை எதிர்கொள்ளும் திறனை விவசாயிகளுக்கு அளிப்பதற்கு தேவையான ஆராய்ச்சிகளை இத்திட்டம் ஊக்குவித்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
