குஜராத் கலவரத்தில் 3 பிரிட்டிஷார் கொலை: 6 பேர் விடுதலையை உறுதி செய்தது ஐகோர்ட்
குஜராத் கலவரத்தில் 3 பிரிட்டிஷார் கொலை: 6 பேர் விடுதலையை உறுதி செய்தது ஐகோர்ட்
ADDED : ஏப் 03, 2025 06:14 AM

அகமதாபாத்; குஜராத் கலவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், ஆறு பேர் விடுதலையானதை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
குஜராத்தின் கோத்ராவில் கடந்த 2002-ல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதை தொடர்ந்து, கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பதிவான பல வழக்குகளில், பிரிட்டனைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்று.
இது தொடர்பாக இம்ரான் முகமது சாலிம் தாவூத் என்பவர் அளித்த புகாரில், 'பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த, என் உறவினர்கள் சையீத் சபீக், ஷகில் அப்துல், முகமது நல்லாபாய் ஆகியோர் ஆக்ராவில் இருந்து ஆஜ்மீர் வழியாக குஜராத்துக்கு காரில் வந்தனர். காரை யூசுப் என்பவர் ஓட்டினார். 2002 பிப்., 28-ல் ஒரு கும்பல் வழி மறித்து காரை எரித்ததோடு நால்வரையும் துரத்தித் தாக்கியது. இதில், பிரிட்டனை சேர்ந்த மூவர் உட்பட நால்வரும் உயிரிழந்தனர்,' என கூறினார்.
விசாரணையின்போது, போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற பிரிட்டன் தூதரக அதிகாரிகள், கார் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சில எலும்புத் துண்டுகள் சேகரித்து, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையே, 2002 மார்ச் 24-ல் தூதரகத்துக்கு வந்த அனாமதேய பேக்ஸ் ஒன்றில், பிரவீண் பாய், மிதன்பாய், ரமேஷ், மனோஜ், ராஜேஷ், கலாபாய் ஆகிய ஆறு பேர், பிரிட்டனைச் சேர்ந்தவர்களை எரித்துக் கொன்றதாக கூறப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்ற நிலையில், 6 பேரையும் விடுதலை செய்து கடந்த 2015-ல் ஹிம்மத் நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், 6 பேரின் விடுதலையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
சாட்சிகள் மற்றும் விசாரணை அதிகாரியின் சாட்சியங்களை ஆய்வு செய்ததில், மாவட்ட நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசிய காரணம் எதுவும் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் கூட, குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றி எந்த விளக்கமும் இல்லை.
உயரம், உடைகள், தோராயமான வயது போன்ற அடையாளம் மட்டுமே தண்டனைக்கு உரியதல்ல என மாவட்ட நீதிமன்றம் சரியாகவே முடிவு செய்துள்ளது. தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கையும் இதையே காட்டுகிறது.
மேலும், எந்தவொரு நேரில் கண்ட சாட்சியும் இல்லாமல், அநாமதேய பேக்ஸ் செய்தியின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, விடுதலையை எதிர்க்கும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

