'காந்தாரா' திரைப்பட நடிகர்கள் ஒரே மாதத்தில் 3 பேர் மரணம்
'காந்தாரா' திரைப்பட நடிகர்கள் ஒரே மாதத்தில் 3 பேர் மரணம்
ADDED : ஜூன் 13, 2025 05:11 AM

ஷிவமொக்கா: கர்நாடகாவின் ஷிவமொக்காவில் நடந்து வரும், காந்தாரா படப்பிடிப்புக்கு வந்திருந்த மலையாள காமெடி நடிகர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இத்திரைப்படத்தில் நடித்து வந்த மூன்று நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், 2022ல் வெளியான, காந்தாரா திரைப்படம், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதன் அடுத்த பாகம், காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, கொல்லுாருக்கு படக்குழுவினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தொடர்ந்து, மே 6ல், கொல்லுாரில் சவுபர்ணிகா ஆற்றில் குளித்த இப்படத்தின் நடிகர் கபில், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
'காமெடி கில்லாடிகள்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, இப்படத்தில் நடித்து வந்த ராகேஷ் பூஜாரி, மே 12ல் உடுப்பியில் நடந்த நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தற்போது, ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த காமெடி நடிகர் நிஜு கலாபவன், 55, நடித்து வருகிறார்.
இவருக்கு ஆகும்பே, மிதிலா ஹோம் ஸ்டேயில் அறை ஒதுக்கியிருந்தனர். இங்கு தங்கியிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை, தீர்த்தஹள்ளியில் உள்ள ஜே.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
நடிகரின் மறைவு குறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் மூன்று நடிகர்கள் உயிரிழந்திருப்பது, படக்குழுவில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.