ADDED : ஜன 09, 2025 06:34 AM
மைசூரு: மைசூரு சிறையில் கேக் தயாரிக்க பயன்படும் திரவத்தை குடித்த ஆயுள் தண்டனை கைதிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மைசூரு டவுன் ராஜேந்திர நகரில் மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 26ம் தேதி ஆயுள் தண்டனை கைதிகளான மாதேஷ், நாகராஜ், ரமேஷ் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின் தீவிர சிகிச்சைக்காக கே.ஆர்., அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாதேஷ், நாகராஜ் உயிரிழந்தனர். நேற்று காலை ரமேஷ் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் சிறையில் உள்ள பேக்கரியில் கேக் தயாரிக்க பயன்படுத்தப்படும் எஸென்ஸ் எனும் திரவத்தை மூன்று பேரும் குடித்தது தெரியவந்துள்ளது.
எதற்காக குடித்தனர் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்யும் நோக்கத்தில் குடித்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கைதிகள் மூன்று பேர் இறந்தது சக கைதிகளிடையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.