3 தமிழர்கள் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்
3 தமிழர்கள் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்
ADDED : ஆக 25, 2026 08:42 PM
பெங்களூரு, ஆக. 26–
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகா தோமியார்பாளையா கிராமத்தில் வசித்தவர்கள் அந்தோணிசாமி, 50, ஜான் ரோஸ் பீட்டர், 45, செபாஸ்டின் டேவிட் குமார், 36. தமிழர்களான மூன்று பேரையும், கடந்த 15ம் தேதி அதிகாலை காவேரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியில் வனத்துறையினர் சுட்டு கொன்றனர்.
இந்த மூன்று பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில், மூன்று பேரையும் அருகில் இருந்து சுட்டு கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ‘இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையில், மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டது; அவர்களது ஆதரவாளர்கள் வனத்துறை அலுவலகத்தை சூறையாடியது; வனத்துறை முகாம்கள் மீது டெட்டனேட்டர்கள் வைத்து தாக்கியது என ராமபுரா, ஹனுார், கொள்ளேகால் ரூரல் போலீஸ் நிலையங்களில் நான்கு வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வழக்குகளை சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சலீம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஹனுாரில் தமிழர்களுக்கு ஆதரவாக, ‘டைகர் ஆப் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹனுார் தாலுகாவில் வசிக்கும் தமிழர்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தினால், அதை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
வனத்துறை அலுவலகங்கள், முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சந்தன கடத்தல் வீரப்பன், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆதரவாளர்கள், ஹனுார் தாலுகாவில், ‘ஆக்டிவ்’வாக செயல்பட்டு வருவதும் தெரிந்துள்ளது.
***
