ADDED : ஜூலை 12, 2025 08:56 PM
மீரட்:உத்தர பிரதேசத்தில், பைக் - டிராக்டர் மோதி, மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உ.பி., மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஷாஜாத், 18, அர்ஷத், 19, ரஹ்சுதீன் என்ற ரோஜு, 18, ஆகிய மூவரும் நேற்று காலை, 7:00 மணிக்கு ஒரே பைக்கில் பராத் நகருக்கு சென்றனர்.
ரோஹ்தா பிளாக் அருகே, முன்னால் சென்ற செங்கல் லோடு ஏற்றிய டிராக்டரை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் சறுக்கி டிராக்டர் மீது மோதியது. பைக்கில் இருந்த மூவரும் துாக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ரஜ்னிஷ் என்பவர் காயம் அடைந்தார்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.