சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தைக்கு 30 ஆண்டு
சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தைக்கு 30 ஆண்டு
ADDED : ஜன 27, 2024 11:14 PM
மைசூரு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு, 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மைசூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மைசூரு நகரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, தார்வாட், நவல்குந்தின், ஹலகவாடி கிராமத்தை சேர்ந்த பரமானந்தா, 31, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் ஹூப்பள்ளியில் வசிக்கின்றனர். 2022 அக்டோபர் 24ல், பிள்ளைகளை கணவரிடம் விட்டு விட்டு, மனைவி மஹாதேஸ்வரா மலைக்கு சென்றிருந்தார்.
தனியாக இருந்த, 14 வயது சிறுமிக்கு, வளர்ப்பு தந்தை பரமானந்தா பாலியல் தொல்லை கொடுத்தார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாக மிரட்டினார்.
அன்றிரவு சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.
ஆனால், அவர் தப்பிச் சென்று பூஜை அறையில் ஒளிந்து கொண்டார்.
பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் இம்சித்து வந்தார்.
பரமானந்தாவின் தொந்தரவு தாங்காமல், தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர். அதன்பின் சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை விவரித்தார்.
கொதிப்படைந்த தாய், பரமானந்தா மீது புகார் செய்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையை முடித்து, மைசூரின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஷைமா கம்ரோட் நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டார்.