ADDED : நவ 05, 2024 12:09 PM

புதுடில்லி: 'பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தராவிட்டால் கொன்றுவிடுவோம்' என பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று (நவ.,05) மீண்டும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீசாரின் ஹெல்ப்லைனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் விடுத்த நபர், 'சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அவரை கொன்று விடுவோம்' என கூறியுள்ளார்.
இதற்கும், பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் தொடர்ப்பு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.