மனித வேட்டையில் மர்ம விலங்கு; ஓநாய் என்கிறது உ.பி., வனத்துறை; மக்கள் அச்சம்
மனித வேட்டையில் மர்ம விலங்கு; ஓநாய் என்கிறது உ.பி., வனத்துறை; மக்கள் அச்சம்
UPDATED : செப் 01, 2024 10:45 AM
ADDED : செப் 01, 2024 10:43 AM

லக்னோ: 'பஹ்ராச் மாவட்டத்தில், மனிதர்களை வேட்டையாடி வந்த ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவோம்' என உ.பி வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், குழந்தைகளை கவ்விச் சென்று, இரையாக தின்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன. மனித வேட்டை நடத்தும் மர்ம விலங்குகள், சாதாரண ஓநாய்கள் தான் என்றும், 6 ஓநாய்கள் சேர்ந்து கூட்டமாக வேட்டையாடுவதாகவும், முதலில் தகவல் பரவியது. வனத்துறையினரும் அவை ஓநாய் தான் என்று கூறினர்.
மக்கள் பதற்றம்
வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் தாக்குதல் நின்றபாடில்லை. இன்னும் இரண்டு ஓநாய்கள், வனத்துறைக்கு ஆட்டம் காட்டி வருகின்றன. அவற்றைப்பிடிக்க 250 வனத்துறை ஊழியர்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை வாயிலாக, தீவிர தேடுதல் முயற்சி எடுத்து வருகின்றனர். 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் இந்த நடவடிக்கை துவங்கியது. ஹிந்தியில் பேடியா என்றால், தமிழில் ஓநாய் என்று அர்த்தம். இந்த பிரச்னையால், அந்தப் பகுதியில் உள்ள 35 கிராமங்களைச் சேர்ந்த, 50,000 பேர் பதற்றத்தில் இருப்பதை உணர்ந்த மாநில அரசும், தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
நடவடிக்கை
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓநாய்கள்தான் கூட்டமாக வந்து, கிராமங்களுக்குள் புகுந்து மனிதர்களை தாக்கியுள்ளன. குறிப்பாக, சிறு குழந்தைகள் அவற்றின் இலக்காக இருந்துள்ளன. மீதமுள்ள 2 ஓநாய்களையும் பிடிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இரண்டு ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது இன்று அல்லது நாளைக்குள் அவை பிடிக்கப்பட்டு விடும். ஓநாய்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
இது குறித்து டாக்டர் ஆஷிஷ் வர்மா கூறியதாவது: இன்று கூட இருவரை ஓநாய்கள் தாக்கி உள்ளன. இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவர் அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். மற்றொருவர் அதிகாலை 5 மணிக்கு வந்தார். அவர்கள் நலமாக இருக்கிறார்கள். எந்த ஆபத்தும் இல்லை. ஓநாய் தாக்குதல் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.டாக்டர் சொல்வது என்ன?
ஓநாயால் தாக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது: அதிகாலை 4 மணியளவில் ஒரு விலங்கு என்னைத் தாக்கியது. என் கழுத்தில் காலால் மிதித்தது. அது நரியை விட பெரியது. என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் நான் பதற்றமடைந்தேன். நான் அதன் வாயைப் பிடிக்கவில்லை என்றால், அது என்னைக் கொன்றிருக்கும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.நரியை விட பெரியது!
மனித வேட்டையாடும் விலங்குகள் உண்மையிலேயே ஓநாய்கள் தானா, சிறுத்தை போன்ற வேறு ஏதேனும் பெரிய விலங்கா என தெரியாமல் மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனினும் வனத்துறையினர் அவை ஓநாய்கள் தான் என உறுதியாக கூறி வருகின்றனர். மீதமுள்ள இரண்டு ஓநாய்களும் பிடிபட்டால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.