எப்படியெல்லாம் நடிக்கிறாங்க… பி.டி.உஷா மீது வினேஷ் போகத் சரமாரி குற்றச்சாட்டு
எப்படியெல்லாம் நடிக்கிறாங்க… பி.டி.உஷா மீது வினேஷ் போகத் சரமாரி குற்றச்சாட்டு
UPDATED : செப் 11, 2024 01:19 PM
ADDED : செப் 11, 2024 11:07 AM

புதுடில்லி: 'பாரீசில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, தன்னை சந்தித்த இந்திய தடகள சங்க தலைவர் பி.டி.உஷா, அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஆதரவு அளிப்பது போல் நடித்தார்' என, சமீபத்தில் காங்கிரசில் இணைந்து , ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத் கூறியுள்ளார்.
தகுதி நீக்கம்
பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து அதிக எடை காரணமாக இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத்தலைவர் பிடி உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
அரசியல் களத்தில்
சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ்போகத், சமீபத்தில் காங்கிரசில் இணைந்ததுடன், ஹரியானா சட்டசபை தேர்தலில், ஜூலானா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
என்ன நடந்தது
பாரீசில் நடந்தது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாரீசில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி.உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல், பாரீசிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.
இது சரியா
நான் மருத்துவமனையில் இருந்த போது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவது போல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி.உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை. இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.