தேச நலனே நமது விருப்பங்களை முடிவு செய்யும்: ரஷ்யா கச்சா எண்ணெய் குறித்து மத்திய அரசு திட்டவட்டம்
தேச நலனே நமது விருப்பங்களை முடிவு செய்யும்: ரஷ்யா கச்சா எண்ணெய் குறித்து மத்திய அரசு திட்டவட்டம்
ADDED : பிப் 09, 2026 11:10 PM

புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி சார்ந்த முடிவுகளை, நாட்டின் நலனே வழிநடத்தும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எரிசக்தி ஆதாரங்களை பொறுத்தவரை, எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. சந்தை நிலவரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது.எண்ணெய் கிடைக்கும் அளவு, சர்வதேச அச்சுறுத்தல், விலை ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன் நிதி உள்ளிட்ட சிக்கலான விஷயங்கள் குறித்தும் நிறுவனங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுக்கின்றன. எரிசக்தி துறையில் அரசோ அல்லது நிறுவனங்களோ எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் தேசிய நலன் வழிநடத்தும்.
இந்தியா அதிகளவு எண்ணெய் மற்றும் காஸ் இறக்குமதி செய்து வருகிறது. நாம் வளரும் பொருளாதாரம். நம்மிடம் உள்ள அளவு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். 80 முதல் 85 சதவீதம் இறக்குமதியை நாம் சார்ந்திருக்க வேண்டும் என்பதால், இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனவே, எரிசக்தி துறையில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், நமது நாட்டு நுகர்வோர் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் ஆச்சர்யம்இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

