"ஜனநாயகத்தை நிலை நிறுத்துங்கள்": ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
"ஜனநாயகத்தை நிலை நிறுத்துங்கள்": ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
ADDED : ஜூன் 03, 2024 06:01 PM

புதுடில்லி: 'தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
அதிருப்தி
கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. பல புகார்கள் வந்தாலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும்.எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றன. லோக்சபா தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
நெருக்கடி
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும். ஆளும் பா.ஜ., அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பா.ஜ.,தோற்றால் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கக்கூடும். தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் கமிஷன் தனது கடமையை செய்யவில்லை.
விபரீத சூழல்
லோக்சபா தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருகின்றன. ஓட்டு எண்ணிக்கையின் போது விபரீத சூழல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்னைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் வந்தால், சுமுகமாக இருக்காது; வன்முறையில் முடியும் ஆபத்து உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.