பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றம் இருக்கிறது: ராகுல் விமர்சனம்
பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றம் இருக்கிறது: ராகுல் விமர்சனம்
ADDED : ஏப் 26, 2024 04:08 PM

பிஜாபூர்: ''நரேந்திர மோடி உரையாற்றும்போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்தார்.
கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: இப்போதெல்லாம் நரேந்திர மோடி உரையாற்றும்போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும்.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அவ்வளவு செல்வத்தை 22 பேருக்குக் கொடுத்தார். இந்தியாவில் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீதம் பேர் கட்டுப்படுத்துகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தையும், பணவீக்கத்தையும் போக்கும். கோடீஸ்வரர்களுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கொடுப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது.
அதன் மூலம் இங்குள்ள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். நரேந்திர மோடி அரசு, சிலரை கோடீஸ்வரர்களாக்கும்; ஆனால், காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

