பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தீவிரம்
பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தீவிரம்
ADDED : ஜூலை 15, 2025 07:45 AM

புதுடில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குகிறது.
பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
முழு விசாரணைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் மூலம் உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்) பெயர்கள் பட்டியலில் இன்னமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17.5 லட்சம் (2.2 சதவீதம்) பேர் பீஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தவிர, 5.5 லட்சம் (0.73 சதவீதம்) வாக்காளர்கள் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்தமாக 35.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியலில் 4.5 சதவீதம் ஆகும். ஜூலை 25ம் தேதிக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.