ADDED : டிச 19, 2024 01:45 AM
திருவனந்தபுரம், கேரளாவில் அனுமதியின்றி தொடர் விடுப்பில் இருந்த 36 டாக்டர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2008 முதல், 600க்கும் மேற்பட்ட டாக்டர்கள் எந்தவித தகவலும் அளிக்காமல், தொடர் விடுப்பில் இருந்தனர்.
இவர்கள், ஜூனியர் ஆலோசகர், உதவி அறுவை சிகிச்சை நிபுணர், விபத்து மருத்துவ அலுவலர் போன்ற பணிகளில் பணியாற்றினர்.
இவர்களில் பலர் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கலாம் அல்லது வெளிநாடு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
நீண்ட காலமாக எந்தவித அனுமதியுமின்றி, தொடர் விடுப்பில் இருந்த டாக்டர்களுக்கு, விளக்கம் கேட்டு கேரள மருத்துவத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில்அளிக்கத் தவறிய 36 டாக்டர்கள் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
நோட்டீசுக்கு பதிலளிக்காத மேலும் 17 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.