ADDED : பிப் 27, 2024 07:16 AM

பெங்களூரு : ''மாநிலம் முழுதும் மார்ச் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும்,'' என, வளர்ச்சி ஆணையர் ஷாலினி ரஜ்னீஷ் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று போலி சொட்டு மருந்து நிகழ்ச்சி நடத்துவது குறித்து, மாநில அளவிலான அதிகாரிகளுடன், வளர்ச்சி ஆணையர் ஷாலினி ரஜ்னீஷ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
மாநிலம் முழுதும் மார்ச் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும். அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தில், இம்முறை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் எந்தெந்த பகுதியில் சொட்டு மருந்து போடப்பட்டது; சொட்டு மருந்து செலுத்துதல் குறைவாவதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து, அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
சுகாதார துறையின் மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான அலுவலர்கள், போலியோ சொட்டு மருந்து திட்டத்தை வெற்றிகரமாக நிர்வகிக்க வேண்டும். போதிய வசதிகள் செய்தால், ஊழியர்களின் பணிச்சுமை குறைவதோடு, அதிக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும்.
நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. அப்பகுதியினர் பயன்பெறும் வகையில் தகுந்த திட்டத்தை வடிவமைத்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால், தகுதி உள்ள அனைத்து குழந்தைகளும் தடுப்பூசியை பெறலாம். போலியோ சொட்டு மருந்து குறித்து நகரம், கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகள், பஸ், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் போடப்படும்.
முதல் நாளான மார்ச் 3ம் தேதி சுகாதார மையங்களிலும்; மற்ற நாட்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்படும்.
இப்பணியில் ஈடுபடும் ஆஷா சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் கவரவ ஊதியம் கிடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலியோ சொட்டு மருந்து போடுவது குறித்து அதிகாரிகளுடன், வளர்ச்சி ஆணையர் ஷாலினி ரஜ்னீஷ் ஆலோசனை நடத்தினார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.
