பூட்டிய அறையில் 4 ஊழியர்கள் மர்ம சாவு; உ.பி.,யில் அதிர்ச்சி
பூட்டிய அறையில் 4 ஊழியர்கள் மர்ம சாவு; உ.பி.,யில் அதிர்ச்சி
ADDED : நவ 20, 2025 12:15 PM

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையின் பூட்டிய அறையில் 4 ஊழியர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் மாவட்டத்தின் பாங்கி தொழிற்பூங்காவில் அமைந்துள்ள எண்ணெய் ஆலையின் பூட்டிய அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 ஊழியர்கள் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, சடலங்களுக்கு அருகே நிலக்கரி எரிந்த நிலையில் இருந்துள்ளது. பூட்டிய அறைக்குள் நிலக்கரி எரிந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அமித் வெர்மா,32, சஞ்சு சிங் 22, ராகுல் சிங் 23, மற்றும் தாவுத் அன்சாரி 28 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தின் தவுகல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
நிலக்கரியை எரிப்பதால் கார்பன் மோனாக்சைடு வாயுவை உருவாகும். பூட்டிய அறையில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால், அதிகளவிலான மோனாக்சைடை சுவாதித்து, இந்த நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே மரணத்தின் உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

