இரும்பு பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 20 பேர் மாயம்
இரும்பு பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 20 பேர் மாயம்
ADDED : ஜூன் 16, 2025 05:59 AM

புனே: மஹாராஷ்டிராவின் புனேயில், இந்திராயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர். 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குண்ட்மாலாவில், இந்திராயானி ஆற்றின் குறுக்கே, 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் உள்ளது. விடுமுறை நாளையொட்டி, இந்த பாலத்தில் நேற்று அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.
பாரம் தாங்க முடியாமல் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த சுற்றுலா பயணியர் இந்திராயானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், நான்கு பேரின் உடல்களை மீட்டனர். மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார்.