ஜம்மு காஷ்மீரில் மழையால் 4 பேர் பலி; இடிந்து விழுந்தது பாலம்; மீட்பு பணியில் ராணுவத்தினர் தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் மழையால் 4 பேர் பலி; இடிந்து விழுந்தது பாலம்; மீட்பு பணியில் ராணுவத்தினர் தீவிரம்
ADDED : ஆக 26, 2025 05:25 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்க்கும் கனமழையால் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சமீபத்திய நாட்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
மழை எச்சரிக்கை
இதற்கிடையில், கதுவா, சம்பா, தோடா, ஜம்மு, ரம்பன் மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று தோடா மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டி செல்வதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால்4 பேர் உயிரிழந்தனர். ஜம்முவின் பகவதி நகரில் உள்ள பாலம் சேதம் அடைந்தது. இதில் சிக்கி உள்ள கார்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மொபைல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
களத்தில் ராணுவம்
ஜம்முவில் பலத்த மழை பெய்ததால், இந்திய ராணுவம் களமிறங்கி காடிகர் பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.