முக்கிய சாட்சியை கொல்ல திட்டம் தீட்டிய தாதா உட்பட 4 பேர் கைது
முக்கிய சாட்சியை கொல்ல திட்டம் தீட்டிய தாதா உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 03, 2026 03:14 AM
புதுடில்லி: குற்ற வழக்கில் அரசுத் தரப்பு முக்கிய சாட்சியை கொலை செய்ய திட்டமிட்ட தாதா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தாதாவாக வலம் வந்தவர் இர்பான் என்ற சேனு பெஹல்வான். தற்போது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ரகசிய தகவல் இவர் மீதான வழக்கு ஒன்றில் முக்கிய சாட்சியை கொலை செய்ய தன் கூட்டாளிகள் அதீப்,22, பர்மன் மற்றும் உஸ்மான் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
இதுகுறித்த ரகசிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. ஜன., 24ம் தேதி இரவு சாஸ்திரி பூங்கா அருகே சவுஹான் பங்கர் பகுதியை சேர்ந்த அதீப் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்பான் உத்தரவுப்படி சாட்சியை கொலை செய்ய துப்பாக்கி வாங்கியதை ஒப்புக் கொண்டார்.
அவரிடம் நடத்திய விசா ரணை அடிப்படையில் பர்மான் 26ம் தேதியும், உஸ்மான் 27ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இர்பானையும் இந்த வழக்கில் 28ம் தேதி கைது செய்தனர். அதற்கான கோப்பு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணை சீலாம்பூரைச் சேர்ந்த இர்பான், 2000- ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து குற்றச் செயல்களை செய்து வருகிறார்.
கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளை மற்றும் குற்றச் சதி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2023ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை இர்பான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
யாரை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது என்பது குறித்து மூன்று பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. சிறையில் உள்ள இர்பானையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

