42 போலி சிம் கார்டுடன் ஐவர் கைது பயங்கரவாத கும்பலுடன் தொடர்பா?
42 போலி சிம் கார்டுடன் ஐவர் கைது பயங்கரவாத கும்பலுடன் தொடர்பா?
ADDED : பிப் 04, 2024 11:08 PM
மங்களூரு: போலி சிம் கார்டுகளுடன், சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயங்கரவாத கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.
தட்சிண கன்னடா, பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா போலீசார், நெரியா கிராம பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்திய போலீசார், காரில் இருந்த ஐந்து பேரிடமும் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் காரில் சோதனை நடத்தப்பட்டது.
டிக்கியில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து 42 சிம் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கேட்ட போது, அவர்கள் பதில் அளிக்கவில்லை.
போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, போலி சிம் கார்டுகள் என்று ஒப்புக்கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் பெயர்கள் ரமீஷ், 20, அக்பர் அலி, 24, முகமது முஸ்தபா, 22, முகமது சாதிக், 27 மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரிந்தது. இவர்கள் ஐந்து பேரும் மங்களூரில் இருந்து பெங்களூருக்கு, போலி சிம் கார்டுகளை கொண்டு சென்றது தெரிந்தது. ஆனால் எதற்கு கொண்டு சென்றனர் என்று கூற மறுத்தனர்.
அக்பர் அலி, இரண்டு ஆண்டுகளாக, துபாயில் வேலை பார்த்து விட்டு, நான்கு மாதங்களுக்கு முன்பு தான், மங்களூரு வந்து உள்ளார்.
துபாயில் இருந்த போது அவருக்கு, பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம், அவர்கள் கூறியதால் பெங்களூரு சென்று, போலி சிம் கார்டுகள் கொடுக்க சென்று இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், என்.ஐ.ஏ., - மத்திய உளவுத்துறை போலீசார், தட்சிண கன்னடா எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, தகவல் பெற்று உள்ளனர். கைதான ஐந்து பேரின் பின்னணி குறித்து, தீவிரமாக விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளனர்.

