உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி
UPDATED : மே 08, 2025 01:05 PM
ADDED : மே 08, 2025 10:45 AM

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து நடந்த உடனே உள்ளூர்வாசிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்து குறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரகாஷியில் உள்ள கங்கானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். நான் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.