ADDED : நவ 24, 2024 11:01 PM
பெங்களூரு: வயிற்று வலி என, மருத்துவமனைக்கு சென்ற இளைஞரின் வயிற்றில் இருந்து, 50 டூத் பிரஷ்களை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.
பெங்களூரை சேர்ந்த மணிகண்டன், 26, குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். குடும்பத்தினர் அவரை, குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் மையத்தில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யும்படி எழுதி கொடுத்தனர். குடும்பத்தினரும் ஸ்கேன் செய்து, அறிக்கை பெற்று வந்தனர்.
அறிக்கையை டாக்டர்கள் ஆய்வு செய்த போது, மணிகண்டனின் வயிற்றுக்குள் டூத் பிரஷ்கள் இருப்பது தெரிந்தது.
அதன்பின் மருத்துவமனை சிறப்பு அதிகாரியான டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர், அறுவை சிகிச்சை செய்து, மணிகண்டன் வயிற்றிலிருந்து, 50 பிரஷ்களை அகற்றினர்.
இவ்வளவு பிரஷ்களை அவர் போதையில் விழுங்கியிருக்கலாம் என, தெரிகிறது.