இரவிகுளம் வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
இரவிகுளம் வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
UPDATED : ஏப் 02, 2025 03:12 AM
ADDED : ஏப் 02, 2025 03:09 AM

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகிலுள்ள இரவிகுளம் தேசிய பூங்கா வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ., சுற்றளவை கொண்டது. புல்மேடுகளால் சூழப்பட்டு அமைதி பள்ளத்தாக திகழ்ந்த இரவிகுளத்தை ஆரம்ப காலத்தில் தேயிலை தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்கள் வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுது போக்கு பகுதியாக பயன்படுத்தினர். பிறகு அப்பகுதியை கையகப்படுத்திய கேரள அரசு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்தது.
அப்பகுதியில் மட்டும் காணப்படும் வரையாடு, அரியவகை உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேயிலை தோட்டங்களை நிர்வாகித்த அதிகாரிகள் சிலர் இரவிகுளத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி இரவிகுளம் 1975 மார்ச் 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. சதுப்பு நிலம், புல்மேடு, சோலைவனம் என மூன்று பிரிவுகளால் பூங்கா சூழப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
நாட்டில் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள 'வரையாடு' எனும் அபூர்வ இன ஆடுகள் ஏராளம் உள்ளன. கடந்தாண்டு ஏப்ரலில் வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் 827 வரையாடுகள் இருப்பது தெரிந்தது. தவிர மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் 5 வகை உள்பட 29 வகை பாலூட்டிகள், 140 வகை பறவைகள், நூற்றுக்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆகியவை உள்ளன. தவிர தென்னிந்தியாவின் மிகவும் உயரமான ஆனமுடி சிகரம் (8842 அடி) பூங்காவில் உள்ளது.
பெருமை
பூங்காவில் அரிய வகை தாவரங்கள் ஏராளம் உள்ளபோதும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் 64 வகை குறிஞ்சி பூக்களில் 20க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்கள் பூங்காவில் உள்ளன. அதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தவாரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் பூங்காவுக்கு பெருமை சேர்த்து வருகிறது. அவற்றுடன் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பெருமை அடைய செய்துள்ளது.
பூங்கா முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற போதும் பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.