52 புதிய இந்திரா உணவகங்கள்; இடம் தேடும் பெங்., மாநகராட்சி
52 புதிய இந்திரா உணவகங்கள்; இடம் தேடும் பெங்., மாநகராட்சி
ADDED : நவ 29, 2024 12:09 AM
பெங்களூரு; பெங்களூரில் புதிதாக 52 இந்திரா உணவகம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான இடங்களை பார்த்து வருகிறது.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, 198லிருந்து 225 ஆக அதிகரித்துள்ளது.கூடுதல் வார்டுகளில் இந்திரா உணவகங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இடம் உள்ள வார்டுகளில் கட்டடம் கட்டப்படும்; இடம் இல்லாத வார்டுகளில் மொபைல் உணவகங்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன. 50 வார்டுகளில் உணவகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சில வார்டுகளில் இடம் தேடப்படுகிறது.
மாநில அரசு இந்திரா உணவகம் கட்ட, தலா 48 லட்சம் ரூபாய் வழங்கும். சமையல் அறையும் கட்ட வேண்டியிருந்தால், 87 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும். உணவகம் கட்ட விரைவில் டெண்டர் அழைக்கப்படும்.
பெங்களூரில் கட்டடங்களில் செயல்படும் 175 இந்திரா உணவகங்களில், 10 உணவகங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை; மற்றவை சிறப்பாக செயல்படுகின்றன. 23 மொபைல் உணவக வாகனங்கள் பாழாகியுள்ளன.
இந்த வாகனங்களை பழுது பார்க்க வேண்டும் என, மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நகரின் ஆறு மண்டலங்களில், உணவு மெனுவை மாற்றி, கேழ்வரகு களி உருண்டை, கீரை குழம்பு உட்பட, சில மெனுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு மண்டலங்களில் உணவு மெனுக்களை மாற்ற, அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.