எட்டு மாநிலங்களில் ,49 தொகுதிகளில், 5 ம் கட்ட தேர்தல்... இன்று! : ராகுல், ராஜ்நாத்சிங், இரானி வெற்றி பெறுவரா?
எட்டு மாநிலங்களில் ,49 தொகுதிகளில், 5 ம் கட்ட தேர்தல்... இன்று! : ராகுல், ராஜ்நாத்சிங், இரானி வெற்றி பெறுவரா?
UPDATED : மே 20, 2024 01:53 AM
ADDED : மே 19, 2024 11:32 PM

புதுடில்லி:லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று நடக்கிறது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலப்பரீட்சையை எதிர்கொள்கின்றனர்.
![]() |
கடந்த மாதம் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கும் லோக்சபா தேர்தலின் நான்கு கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்துவிட்டது. 379 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில், 66.95 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 45.10 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
இந்நிலையில், ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 14, மஹாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் ஏழு, ஒடிசா மற்றும் பீஹாரில் தலா ஐந்து, ஜார்க்கண்டில் மூன்று, ஜம்மு - காஷ்மீர், லடாக்கில் தலா ஒரு இடங்களுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மொத்தம், 94,732 ஓட்டுச்சாவடிகளில் காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் பணியில் 9.47 லட்சம் பணியாளர்கள்ஈடுபடுகின்றனர்.
ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 8.95 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.
![]() |
உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் காங்., வேட்பாளராக ராகுலும், அமேதியில் பா.ஜ., வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், அவரை எதிர்த்து காங்., சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களம் காண்கின்றனர்.
உ.பி.,யின் லக்னோவில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் இருந்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், பீஹாரின் ஹாஜிபுரில் இருந்து சிராக் பஸ்வான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று பலப்பரீட்சையை எதிர்கொள்கின்றனர்.
இது தவிர, ஜார்க்கண்டின் கண்டே மற்றும் உ.பி.,யின் லக்னோ கிழக்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுடன், ஒடிசாவின் 35 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியுடனும் நடத்தி முடிப்பதற்கானஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.


