ADDED : ஏப் 04, 2025 06:49 AM

கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு, உயர் நீதிமன்றம் ஆறு வார காலம் தடை விதித்து இருக்கும் நிலையில், நிரந்தரமாக தடை விதிக்க வேண்டுமா என்பது பற்றி பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
கடந்த நான்கு, ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பஸ், ஆட்டோ, வாடகை கார்களில் தான் மக்கள் பயணம் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது பைக் டாக்சியில் பறக்கின்றனர். குறிப்பாக ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தாங்கள் செல்லும் இடத்திற்கு குறுகிய நேரத்தில் அழைத்து செல்லும் வாகனம், பைக் டாக்சி என்று நம்புகின்றனர். இதனால் புற்றீசல்கள் போன்று, இன்று பெருநகரங்களில் பைக் டாக்சி சேவை விரிவடைந்து உள்ளது.
மஞ்சள் பலகை
பொதுவாக வாடகை வாகனம் ஓட்ட வேண்டும் என்றால், போக்குவரத்து துறை விதிகள்படி வாகனங்களில் மஞ்சள் நிற வாகன பதிவெண் பலகை பொருத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பைக் டாக்சி ஓட்டுவோர், தங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுவோருக்கு பலத்த அடி விழுகிறது.
கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில், பைக் டாக்சி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
பலாத்காரம்
'எங்களது வயிற்று பிழைப்பில் மண் அள்ளி போடாதீர்கள்' என்று, பைக் டாக்சி ஓட்டுவோரிடம், ஆட்டோ டிரைவர்கள் சண்டைக்கு போகின்றனர். 'உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் உள்ளதா, நாங்களும் பிழைப்புக்காக தான் பைக் டாக்சி ஓட்டுகிறோம்' என்று, அதை ஓட்டுபவர்கள் சொல்கின்றனர்.
அதே நேரம், பெண் பயணியரிடம், சில பைக் டாக்சி டிரைவர்கள் எல்லை மீறி நடக்கும் சம்பவங்களும் பெங்களூரில் நடந்து உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், பைக் டாக்சி டிரைவரால், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
விரைவான பயணத்திற்கு பைக் டாக்சி என்று கூறப்பட்டாலும், அதிலும் ஆபத்துகள் இருக்கிறது என்பதை பயணியரும் ஒப்புக்கொள்கின்றனர்.
இந்நிலையில் பைக்குகளை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்வதற்காக, கர்நாடக அரசிடம், 'ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்' உள்ளிட்ட சில நிறுவனங்கள் விண்ணப்பித்தது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷியாம் பிரசாத், 'பொருத்தமான அரசு விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை, பைக் டாக்சிகளை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்யவோ அல்லது சேவைகளுக்கு உரிமம் வழங்கவோ போக்குவரத்து துறைக்கு உத்தரவிட முடியாது.
'விதிமுறை இல்லாமல் பைக் டாக்சிகள் இயக்க அனுமதிக்க முடியாது. இதனால் அடுத்த ஆறு வாரங்களுக்கு ஓலா, ஊபர், பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும். இதனை அரசு உறுதி செய்ய வேண்டும். தேவையான விதிகளை வகுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இது குறித்து பைக் டாக்சி பயன்படுத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது
. - நமது நிருபர் -

