அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் 64 லட்சம் பேர் ஊடுருவல்: அமித் ஷா
அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் 64 லட்சம் பேர் ஊடுருவல்: அமித் ஷா
ADDED : ஜன 31, 2026 03:09 AM

குவஹாத்தி: “காங்கிரசின் 20 ஆண்டுகால ஆட்சியில், அசாமின் ஏழு மாவட்டங்களில் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை, 64 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையையே மாற்றியமைத்துள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1,715 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை நேற்று அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார்.
அடிக்கல்
திப்ரூகரில் நடந்த இந்நிகழ்ச்சியில், 284 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அசாம் சட்டசபைக்கான இரண்டாவது வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில், புதிய சட்டசபை கட்டடமும், எம்.எல்.ஏ.,க்களுக்கான விடுதியும் உள்ளன.
இதைத்தொடர்ந்து, அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டியுள்ள அசாமின் தேமாஜியில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
அசாமின் ஏழு மாவட்டங்களான துப்ரி, பர்பேட்டா, தர்ராங், மோரிகான், போங்கைகான், நகாவ்ன், கோல்பாரா உள்ளிட்ட பகுதிகள் ஊடுருவல்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதற்கு முன் ஊடுருவல்காரர்கள் இல்லாத நிலையில், காங்.,கின் 20 ஆண்டுகால ஆட்சிக்குள் 64 லட்சம் பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, அசாம் மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையையே மாற்றியுள்ளது.
பாதிப்பு
இதன்மூலம், அசாமின் கலாசாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காங்., ஆட்சிக் காலத்தில், பல பழங்குடி சமூகங்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதில் சிரமங்களை எதிர்கொண்டன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், மாநிலத்தில் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ., அரசும் ஊடுருவல்காரர்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியதுடன், 1.26 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டளித்துள்ளது.
ஊடுருவல்காரர்களை, பா.ஜ.,வால் மட்டுமே தடுக்க முடியும். எனவே, விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., அரசுக்கு அசாம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

