6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; இணைய குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; இணைய குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
ADDED : டிச 19, 2024 07:33 AM

புதுடில்லி: இணைய (சைபர்) குற்றங்களைத் தடுக்க நடப்பாண்டில், கடந்த நவம்பர் 15ம் தேதி வரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐ.எம்.இ.ஐ., எண்களையும் முடக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரத்தில் இணைய வழி குற்றங்களும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மோசடி பேர் வழிகள், ஆன்லைன் வழியாக மிரட்டி பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில், கடந்த நவம்பர் 15ம் தேதி வரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐ.எம்.இ.ஐ., எண்களையும் முடக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்குர் அளித்த பதில் விபரம் பின்வருமாறு: சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான, திட்டங்களின் ஒரு பகுதியாக, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கடந்த நவம்பர் 15ம் தேதி வரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐ.எம்.இ.ஐ., எண்களையும் முடக்கி உள்ளோம்.
நிர்பயா நிதியின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றத் தடுப்பு திட்டத்தின் மூலம் ரூ.131.60 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் விசாரணை தொடர்பாக, பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. போலி டிஜிட்டல் கைதுகள் மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகள் போன்ற சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.