UPDATED : ஜன 04, 2024 07:39 PM
ADDED : ஜன 04, 2024 07:33 PM

புதுடில்லி: இந்தாண்டில் ( 2024) நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபாவிற்கு எம்.பி.,யாக தேர்வான 9 மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன், ஜெயாபச்சன் உள்ளிட்ட 68 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகாலம் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபா செயலகவட்டாரங்கள் கூறியது, உ.பி. மாநிலத்தில் அதிகபட்சமாக 10 எம்.பி.க்களும், மஹாராஷ்டிரா, பீஹாரில் தலா 6 எம்.பி.,க்களும், ம.பி., மேற்குவங்கம், குஜராத், கர்நாடகாவில் தலா 4 என பல்வேறு மாநிலங்களில் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலம் நிறைவடைகிறது.
இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்ட்வியா, மத்திய இணை அமைச்சர் முரளிதரன், புருஷோத்தம் ரூபாலா உள்ளிட்ட 9 மத்திய அமைச்சர்கள் பதவி நிறைவு செய்கின்றனர்.
இந்தாண்டு லோக்சபாவிற்கும் தேர்தல் நெருங்கி வருவதால், காலியாக போகும் ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.