டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., கிடைக்காமல் கேரள மாநிலத்தில் 7.5 லட்சம் பேர் காத்திருப்பு
டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., கிடைக்காமல் கேரள மாநிலத்தில் 7.5 லட்சம் பேர் காத்திருப்பு
ADDED : பிப் 04, 2024 05:56 AM

பாலக்காடு: கேரளா மாநிலத்தில், 'டிரைவிங் லைசென்ஸ்' மற்றும் வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் கிடைக்காமல் 7.5 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மா.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த அரசு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் அச்சிட, பாலக்காட்டில் உள்ள, இந்திய டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (ஐ.டி.ஐ.,) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனத்துக்கு, 8 கோடி ரூபாய் அரசு நிலுவை வைத்துள்ளதால், அச்சிடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் கிடைக்காமல், 7.5 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
அதேபோல், வாகன ஆவணங்கள், உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்த வகையில், 3 கோடி ரூபாய் தபால் துறைக்கும் அரசு நிலுவை வைத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி முதல், 'ஐ.டி.ஐ.,' நிறுவனம் டிரைவிங் லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் அச்சிடுதல் பணியை நிறுத்தி வைத்துள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் ஆகியவைக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் இருந்து, முன்னதாகவே, 245 ரூபாய் அரசு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லைசென்ஸ் பெற, டிரைவிங் தேர்வு வெற்றிகரமாக பூர்த்தி செய்து பல மாதங்களாகியும், லைசென்ஸ் பெறாதவர்கள் மற்றும் வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் பெறாதவர்கள், அலுவலகங்களில் தகராறு செய்வதும் அதிகரித்து உள்ளதால், மோட்டார் வாகன அதிகாரிகளும் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
வாகன ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் கிடைக்காததால் பரிசோதனை, 'பர்மிட்' எடுப்பது, வாகன பரிமாற்றம் ஆகியவையும் தற்போது முடங்கி உள்ளன.
மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய லாரி, பஸ் ஆகியவையின் பயணமும் இதனால் பாதித்துள்ளது. இதற்கு, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது வாகன உரிமையாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.