கிரஹலட்சுமி திட்டத்தின் பலன் கோலாரில் 7,500 பேர் ஏமாற்றம்
கிரஹலட்சுமி திட்டத்தின் பலன் கோலாரில் 7,500 பேர் ஏமாற்றம்
ADDED : ஜன 06, 2024 07:00 AM
தங்கவயல்: கோலார் மாவட்டத்தில் 7,520 பேருக்கு கிரஹ லட்சுமி திட்டத்தின் 2,000 ரூபாய் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரசார் ஐந்து உத்தரவாதங்களை அறிவித்தார்கள். அதன்படி கடந்த ஆறு மாதங்களில் தங்களின் உத்தரவாதங்களை அவர்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர்.
இதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்று.
இதற்காக குடும்ப தலைவிகள், கடந்த ஜூலை மாதம் முதல் கிராம ஒன், சேவா சிந்து, பாபுஜி சேவா கேந்திரா மையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
கோலார் மாவட்டத்தில் மொத்தம் 5,60,108 பெண்கள் பதிவு செய்தனர். இவர்களில் 7,520 பேருக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படவில்லை.
அதாவது மாவட்டத்தில் மொத்தம் 88.22 சதவீதம் பேருக்கு நிதி கிடைக்கிறது. 21.78 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை.
தாலுகா அளவில் பங்கார் பேட்டை 87.43, தங்கவயல், கோலார் 89.01, மாலூர் 88.01, முல்பாகல் 88.40, சீனிவாசப்பூர் 87.85 சதவீதம் பயனாளிகளுக்கு மட்டுமே நிதி கிடைக்கிறது.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர் இல்லாதது; செல்போன், வங்கி கணக்குகள் இல்லாதது, ரேஷன் கார்டில் குடும்ப தலைவி, மருமகள் பெயர் இடம் பெற்று இருவர் பதிவு செய்திருப்பது, ஆதார் எண் இணைக்காதது உள்ளிட்ட காரணங்களால் 7,520 பேருக்கு வங்கி மூலம் பணம் செலுத்த முடியவில்லை என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.