ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 8 பேர் தகுதி நீக்கம்
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 8 பேர் தகுதி நீக்கம்
ADDED : பிப் 29, 2024 02:25 AM
அமராவதி,:ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, எட்டு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, அம்மாநில சட்டசபை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடக்கிறது. மொத்தம் 175 தொகுதிகளை உடைய இங்கு, வரும் ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆனம் ராமநாராயண ரெட்டி, மேகபதி சந்திரசேகர் ரெட்டி, கே.ஸ்ரீதர் ரெட்டி, உண்டவல்லி ஸ்ரீதேவி ஆகியோர், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, ஒய்.எஸ்.ஆர். காங்., சார்பில், சட்டசபை சபாநாயகர் தம்மினேனி சீதாராமிடம் மனு அளிக்கப்பட்டது.
இதே போல், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தன் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான, மத்தலோ கிரிதர் ராவ், கரணம் பலராம், வல்லபனேனி வம்சி, வாசுபள்ளி கணேஷ் ஆகியோரை தகுதிநீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் மனு அளித்தது.
இந்நிலையில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்., மற்றும் தெலுங்கு தேசத்தின் தலா நான்கு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, சட்டசபை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

