ADDED : ஜன 07, 2025 02:37 AM

சாம்ராஜ் நகர்:   கர்நாடகாவில், 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்பு, வயதானவர்களுக்கு மட்டும் வந்த மாரடைப்பு, இன்று இளம் வயதினருக்கும் வரத் துவங்கி விட்டது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லிங்கராஜு - ஸ்ருதி தம்பதி. இவர்களின் ஒரே மகளான தேஜஸ்வினி, 8, தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
படிப்பில் ஆர்வத்துடன் இருக்கும் தேஜஸ்வினி, வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களிடம் வீட்டுப் பாடங்களை காண்பிக்கும்படி ஆசிரியை கேட்டார்.
அப்போது, தேஜஸ்வினி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மேலும், சுயநினைவின்றி சிறுநீரும் கழித்து விட்டார். இதை பார்த்து ஆசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, சிறுமியை அருகில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் துாக்கிச் சென்றனர். சிறுமியை சோதனை செய்த டாக்டர்கள், 'சிறுமி திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார்' என கூறினர்.
தகவலறிந்து ஓடோடி வந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

