8 ஆண்டுகளில் 40 ஆயிரம் மரங்கள்: தரிசு நிலத்தை பசுமை நிலமாக மாற்றி சாதனை
8 ஆண்டுகளில் 40 ஆயிரம் மரங்கள்: தரிசு நிலத்தை பசுமை நிலமாக மாற்றி சாதனை
UPDATED : ஜன 25, 2025 05:08 PM
ADDED : ஜன 25, 2025 05:01 PM

இந்தூர்: இந்தூரில் தரிசாக கிடந்த நிலத்தில் குங்குமப்பூ, ருத்ராக்சம், டிராகன் பழ மரம் உள்ளிட்ட 40 ஆயிரம் மரங்களை நடவு செய்த ஓய்வு பெற்ற கல்வியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ம.பி.,யின் இந்தூரைச் சேர்ந்தவர் சங்கர் லால் கார்க்(74)., உலக ஆராய்ச்சியாளர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக தற்போது உள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு கல்வி நிறுவனம் ஒன்றில் ஓய்வு பெற்ற இவர், குடும்பத்துடன் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி துவங்க முடிவு செய்தார். இதற்காக மோவ் என்ற இடத்தில் நிலம் வாங்கினார். ஆனால், அப்பகுதி வெறும் தரிசாக பாறைகள் நிரம்பியதாக இருந்தது. இதனால், அவர் நினைத்தபடி கல்வி நிறுவனம் துவங்க முடியவில்லை. இதனையடுத்து, அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடிவு செய்த கார்க், மரக்கன்றுகள் வாங்கி நட்டதுடன், தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்த்தார்.
துவக்கத்தில் 2016 ம் ஆண்டு, வேம்பு, அரசமரம் மற்றும் எலுமிச்சை மரங்களை நடத்துவங்கினார். பிறகு படிப்படியாக, பாறை நிறந்த பகுதியில் காஷ்மீரின் குங்குமப்பூ, கல்பவிருட்சம், குங்குமப்பூ, ருத்ராட்சம், ஆப்பிள், டிராகன் பழம், ஆலிவ், லிச்சி, ஆப்ரிக்க துலிப்ஸ் தேக்குமரம், சந்தன மரம், ஈட்டி மரம், சில்வர் ஓக், மூங்கில், வில்லோ மற்றும் ஏலக்காய் மரங்கள் என 500க்கும் மேற்பட்ட இனங்களை நட்டார். இதனால், 2024 ஆக., கணக்குப்படி, 40 ஆயிரம் மரங்களுடன் பசுமையாக காட்சி அளிக்கிறது.
இப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் 12 அடி உயரம் வளர்ந்துள்ளது.
காஷ்மீர் மலைப்பகுதிகளில் மட்டும் வளரும் குங்குமப்பூவும் இங்கு உள்ளது. முதலில் 2021ம் ஆண்டு 25 குங்குமப்பூ செடிகளை நடப்பட்டன. 2022 ல் இந்த எண்ணிக்கை 100 ஆகவும், 2023 ல் 500 ஆகவும் உயர்ந்தது. இச்செடிகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க தொழில்நுட்பத்தை கார்க் பயன்படுத்தி உள்ளார்.
அதேநேரத்தில், இந்த மரக்கன்றுகளை வளர்க்க கார்க் பல சவால்களை எதிர்கொண்டார். குறிப்பாக மரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 3 இடங்களில் 600 அடி போர் போட்டும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து முதலில் தண்ணீர் தொட்டி வாங்கி வைக்கப்பட்டது. பிறகு, குளம் வெட்டி அதில் தண்ணீரை சேகரித்து, சொட்டுநீர் பாசன முறையில் மரக்கன்றுகளுக்கு விடப்பட்டது.
இவ்வாறு பசுமையாக காட்சியளிக்கும் இந்தப் பகுதியானது தற்போது 30 வகையான பறவைகள், 25 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நரி, முயல், காட்டு பன்றிகள், கழுதைப்புலிகளுக்கு புகலிடமாக இந்த பகுதி விளங்குகிறது.
இந்த வனப்பகுதியை பார்வையிட வருபவர்களிடம் கார்க் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை இங்கு கருத்தரங்கம் மற்றும் தியானக்கூடம் ஒன்றையும் அவர் நிறுவி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக தோட்டம் மற்றும் மைதானத்தையும் உருவாக்கி உள்ள அவர், இப்பகுதியில் இன்னும் 10 ஆயிரம் மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலையும், பூமியையும் காக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார்.