UPDATED : ஆக 28, 2011 11:44 PM
ADDED : ஆக 28, 2011 11:15 PM

புதுடில்லி : எம்.பி.,க்களின் திறமை குறித்து, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் விமர்சித்து வரும் நிலையில், லோக்சபா எம்.பி.,க்களில், 80 சதவீதம் பேர் பட்டதாரிகள் என, தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், இவர்களில், 30 சதவீதம் பேர், முதுகலை பட்டப்படிப்பு அல்லது டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
லோக்சபா அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட அளவு கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என, நமது அரசியல் சட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், நமது அனுபவத்தில் பார்க்கும் போது, குறிப்பிட்ட அளவு படித்தவர்களே லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர்.தற்போதைய, 15வது லோக்சபாவில், படிக்காதவர்கள் யாரும் எம்.பி.,க்களாக இல்லை. 80.74 சதவீத எம்.பி.,க்கள், பட்டப்படிப்பை முடித்தவர்கள்.
இவர்களிலும், 30 சதவீதம் பேர் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள். அதிலும், 24 சதவீத எம்.பி.,க்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள். 20 எம்.பி.,க்கள் மட்டுமே, 10ம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள்; 32 பேர், 10ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள்.தற்போதைய லோக்சபாவில் உள்ள எம்.பி.,க்களில், 291 பேர், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 184 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கடந்த, 14வது லோக்சபாவில், இடம் பெற்ற எம்.பி.,க்களில், 77.16 சதவீதம் பேர், பட்டப் படிப்பை முடித்தவர்கள்.இவ்வாறு லோக்சபா அதிகாரிகள் கூறினர்.