அந்தமான் கடல் பகுதியில் 87 சதவீதம் மீத்தேன்: முதற்கட்ட ஆய்வில் உறுதி
அந்தமான் கடல் பகுதியில் 87 சதவீதம் மீத்தேன்: முதற்கட்ட ஆய்வில் உறுதி
ADDED : செப் 28, 2025 06:12 AM

புதுடில்லி: நம் நாட்டின் ஆழ்கடல் ஆய்வுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
வலியுறுத்தல் இதனால் ஏற்படும் செலவுகளை குறைக்க, நம் நாட்டிலேயே இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கிறதா என்ற தேடலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, 'ஆழ்கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிய வேண்டும்' என, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், அந்தமான் தீவுகளில் ஸ்ரீ விஜயபுரம் - 2 எண்ணெய் கிணறு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே 17 கி.மீ., தொலைவில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப் பட்டுள்ளது.
இ தையடுத்து 'அந்தமான் கடல், நமக்கு ஏராளமான எரிசக்தி ஆற்றலை அள்ளி தந்திருக்கிறது' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அந்தமான் கடல் பகுதியில், 7,257 மற்றும் 7,382 அடி ஆழத்தில் ஆரம்பக்கட்ட உற்பத்தி பரிசோதனை நடத்தப்பட்டதில், அங்கு இயற்கை எரிவாயு கொட்டி கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிவாயு மாதிரிகள் கப்பல் மூலம் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு எடுத்து வந்து பரிசோதிக்கப்பட்டதில், 87 சதவீத அளவுக்கு மீத்தேன் இருப்பது உறுதியாகி உள்ளது.
இயற்கை எரிவாயு எவ்வளவு ஆழத்தில் கொட்டிக்கிடக்கின்றன. வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு பலன் தருமா என்பது அடுத்து வரும் மாதங்களில் உறுதி செய்யப்படும்.
நம்பிக்கை எனினும் அந்தமான் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், வடக்கே மியான்மரில் இருந்து தெற்கே இந்தோனேஷியா வரையிலான கடல் பகுதியில், இயற்கை எரிவாயு வளம் கொட்டிக்கிடக்கலாம் என்ற நம் நீண்ட கால நம்பிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.
இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது, நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு மிக முக்கியமான மைல் கல்லாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.