sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த 9 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்!' நடிகரை வேறு சிறைக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை

/

சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த 9 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்!' நடிகரை வேறு சிறைக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை

சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த 9 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்!' நடிகரை வேறு சிறைக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை

சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த 9 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்!' நடிகரை வேறு சிறைக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை


ADDED : ஆக 27, 2024 05:06 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : சிறையில் நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த சிறை சூப்பிரண்டுகள் உட்பட ஒன்பது பேரை, 'சஸ்பெண்ட்' செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. பெலகாவி ஹிண்டல்கா சிறைக்கு தர்ஷனை மாற்றவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன் நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு கையில் டீ கப், இன்னொரு கையில் சிகரெட் உடன் தர்ஷன் அமர்ந்திருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

தொடர்ந்து, சிறையில் இருந்தபடியே ஒருவருடன் வீடியோ காலில் தர்ஷன் பேசும் காட்சிகளும் வெளியாகி, அதிர்ச்சியை அளித்தது.

முதல்வர் அதிருப்தி


ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பேசப்பட்டு வரும் நிலையில், ரவுடிகளுடன் அமர்ந்து தர்ஷன் டீ குடிக்கும் படம் மற்றும் வீடியோ கால் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

புகைப்படம் வெளியானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் சந்தித்து பேசினார்.

தர்ஷனுக்கு சிறையில் அளிக்கப்படும் ராஜ உபசாரம் குறித்து டி.ஜி.பி., யிடம், முதல்வர் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.

'நீங்களே நேரடியாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லுங்கள். அங்கு என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து எனக்கு அறிக்கை தாக்கல் செய்யுங்கள்' என, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.

நடவடிக்கை


நேற்று முன்தினம் இரவு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவும் சந்தித்து பேசினார்.

சிறைத்துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம் மொபைல் போனில் பேசிய பரமேஸ்வர், 'சிறைக்கு சென்று ஆய்வு நடத்துங்கள்' என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை பரப்பன அக்ரஹாரா சிறையில் அமைச்சர் பரமேஸ்வர் ஆய்வு நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:

தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைப்பது தொடர்பான புகைப்படங்கள் என் கவனத்திற்கு வந்ததும், சிறை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினேன்.

தர்ஷனுக்கு உதவிய பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டுகள் கேசவமூர்த்தி, மல்லிகார்ஜுன் சாமி, தலைமை வார்டன்கள் வெங்கடப்பா, சம்பத்குமார், வார்டன் பசப்பா, ஜெயிலர்கள் சரணபசவா, பிரபு, உதவி ஜெயிலர்கள் திப்பேசாமி, ஸ்ரீகாந்த் ஆகிய ஒன்பது பேரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளோம்.

தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது பற்றி விரிவான அறிக்கை கேட்டுள்ளேன். இதில் எவ்வளவு பெரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் வேறு சிறைகளிலும் இதுபோன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்ஷனுக்கு சிறை விதிகளின்படி வசதிகள் செய்து தர வேண்டும். கூடுதல் வசதிகள் செய்து தரக்கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தர்ஷன் கைது செய்யப்பட்ட போதே அவரை விடுவிக்க அழுத்தம் இருந்ததாக, ஊடகத்தினர் கூறுகின்றனர். எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியவும் மாட்டேன்.

ஜாமர் கருவி


சிறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு உள்ளது. அதையும் மீறி தர்ஷன், மேலும் சிலர் வட்டமாக அமர்ந்து காபி குடித்து உள்ளனர். எங்கு தவறு நடந்துள்ளது என்று பார்ப்போம்.

சிறையில் இருந்தபடி தர்ஷன் ஒருவருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். சிறைக்குள் மொபைல் போன் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்படும். சிறையின் பாதுகாப்புக்காக ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

ஜாமர் மூலம் தங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக, சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஜாமரின் அதிர்வுகள் குறைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

எவ்வளவு பணம்?


பரமேஸ்வர் வந்து சென்ற பின், சிறை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியும் ஆய்வு நடத்தினார். சிறையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கடும் கோபத்தில் இருந்த மாலினி கிருஷ்ணமூர்த்தி, 'சிறை அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

தர்ஷனுக்கு மட்டும்தான் ராஜ உபசாரம் அளிக்கிறீர்களா. இல்லை மற்ற கைதிகளுக்கும் இதே உபசாரம் தானா. கைதிகளுக்கு ராஜ உபசாரம் அளிப்பதை முதலில் நிறுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

'ஒவ்வொரு கூட்டத்திலும் சிறையில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறோம். அப்படி இருந்தும் இப்படி செய்தால் எப்படி.

சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அவருக்கு கூடுதல் சலுகை வழங்கக் கூடாது.

'தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைக்க ஏற்பாடு செய்த நபர்கள் யார். இது எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ராஜ உபசாரம் செய்ய எவ்வளவு பணம் வாங்கினீர்கள்.

தர்ஷனுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பாக விரைவில் எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

தகவல் இல்லை


பெலகாவியில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:

சிறையில் தர்ஷனுக்கு சகல வசதிகள் செய்து கொடுத்த சூப்பிரண்டுகள் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் வசதி செய்து கொடுத்தனர் என்பது பற்றி தகவல் இல்லை.

இதில் மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்து கொடுத்ததில், ரவுடி வில்சன் கார்டன் நாகாவின் பங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. சிறை ஊழியர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த அவர், பணம் கொடுத்து தர்ஷனுக்கு தேவையானதை வாங்கி கொடுத்ததும் தெரிந்துள்ளது.

பனசங்கரியில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் இருந்து, தர்ஷனுக்கு அசைவ உணவுகள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், தர்ஷனை பெங்களூரில் இருந்து பெலகாவியின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இன்று அவர் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டு இருக்கும் ரவுடி குல்லா சீனா தன் பிறந்த நாளை, சிறைக்குள் வைத்து கொண்டாடிய வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக் துப்பாக்கி வடிவில் இருந்தது. சிறையில் கேக் வெட்ட, குல்லா சீனாவுக்கு, சிறை ஊழியர்கள் துணை போனது தெரிந்துள்ளது.








      Dinamalar
      Follow us