ADDED : ஜூலை 15, 2025 06:47 AM

ஹைதராபாத்; ஆந்திராவில், மாம்பழங்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
ஆந்திராவின் அன்னமையா, திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த 21 தினக்கூலி தொழிலாளர்கள், ராஜம்பேட்டா சுற்றுவட்டார பண்ணைகளில் மாம்பழங்களை பறிக்கச் சென்றனர். மாம்பழங்கள் ஏற்றப்பட்ட லாரி, ரயில்வே கொடுரு சந்தைக்குச் சென்று கொண்டிருந்தது. தொழிலாளர்கள், மாம்பழங்களின் மேல் அமர்ந்திருந்தனர்.
கடப்பாவில் இருந்து கிட்டதட்ட 60 கி.மீ., தொலைவில், ரெட்டி செருவு கட்டா என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்த லாரி, எதிர்திசையில் வந்த ஒரு காரில் மோதாமல் இருக்க முயன்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்ததில், கிட்டத்தட்ட 40 டன் மாம்பழங்களுக்கு அடியில் தொழிலாளர்கள் சிக்கியதில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர், ராஜம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கடப்பாவிற்கு அனுப்பப்பட்டனர். விபத்தில் உயிர் தப்பிய லாரி ஓட்டுநர், லாரியை வேகமாக இயக்கியதும் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என, போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.