ADDED : டிச 18, 2024 10:27 PM

பெலகாவி; “போக்குவரத்துத் துறைக்கு, மொத்தம் 9,000 ஊழியர்களை நியமிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதில் 4,000 ஊழியர்களை நியமிக்க தயாராகிறோம்,” என அத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி சார்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சங்கனுாரா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் சந்தோஷ் லாட் பேசியதாவது:
போக்குவரத்துத் துறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. முதற்கட்டமாக 9,000 பேரை நியமிக்க, நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களில் 4,000 பேரை நியமிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., வடமேற்கு, கல்யாண கர்நாடகா ஆகிய போக்குவரத்துக் கழகங்களுக்கு, 1,346 புதிய பஸ்கள் வாங்கப்படும். ஏற்கனவே 1,304 பஸ்கள் வாங்கப்பட்டன. நிதித்துறையின் அனுமதி பெற்று, மீதமுள்ள பஸ்களையும் விரைவில் வாங்குவோம்.
மாநிலத்தில் 'சக்தி' திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின், போக்குவரத்துத் துறைக்கு தினமும் 16 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. 375 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தப்படுகிறது. பெண் ஊழியர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
'சக்தி' திட்டத்தால், பெண்களுக்கு பணம் மிச்சமாகிறது. இது எங்கள் அரசின் சாதனை. திட்டம் துவங்குவதற்கு முன்பு, தினமும் 96 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்தனர். திட்டம் துவக்கிய பின், 1.16 லட்சம் பயணம் செய்கின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை 1.33 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 60 லட்சம் பயணியர் பெண்கள். பஸ்களின் சேவையும் அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் ரயில்வேவில், 600 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். போக்குவரத்துக்கழக பஸ்களில் 300 கோடி பேர் பயணம் செய்கின்றனர். நாட்டிலேயே நமது போக்குவரத்துக்கழகம் முதல் இடத்தில் உள்ளது.
'சக்தி' திட்டத்தால், சில இடங்களில், பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவது உண்மைதான். இதைத்தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.