13 வயது சிறுவன் சுட்டதில் 3 வயது தம்பி பரிதாப பலி
13 வயது சிறுவன் சுட்டதில் 3 வயது தம்பி பரிதாப பலி
ADDED : பிப் 17, 2025 11:16 PM

மாண்டியா: திருடன் - போலீஸ் விளையாட்டில், உண்மையான துப்பாக்கி என்று தெரியாமல், 13 வயது சிறுவன் சுட்டதில், 3 வயது தம்பி உயிரிழந்தான்.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், நாகமங்களாவின் தொண்டே மண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பிரமுகர் நரசிம்ம மூர்த்தி. கோழிப் பண்ணை வைத்துள்ளார்.
இங்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த சஷாங்க் - லிபிகா தம்பதி சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அபிஷேக், 3, என்ற மகன் இருந்தான்.
பண்ணையின் பாதுகாப்புக்காக நரசிம்ம மூர்த்தி அனுமதி பெற்று வாங்கிய ஒற்றை குழல் துப்பாக்கி, மேற்கு வங்க தம்பதி தங்கியிருந்த வீட்டில் இருந்தது.
விடுமுறை நாளான நேற்று முன்தினம், சஷாங்கின் சகோதரர் பவசங்கர், தன் மகன் சுதீப் தாஸ், 13, உடன் வந்திருந்தார். சுதீப் தாசும், அபிஷேக்கும் சேர்ந்து திருடன் - போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டின் பீரோ மீது வைக்கப்பட்டிருந்த தோட்டா நிரப்பப்பட்ட உண்மையான துப்பாக்கியை பார்த்த சுதீப் தாஸ், பொம்மை துப்பாக்கி என நினைத்து, அதை எடுத்து ட்ரிக்கரை அழுத்தினார்.
இதில் இருந்து வெளியேறிய குண்டு, அபிஷேக்கின் வயிற்றை துளைத்து, அவனது தாய் லிபிகா மீதும் பாய்ந்தது.
குண்டு பாய்ந்ததில் அபிஷேக்கின் குடல் கிழிந்தது. வெளியே சென்றிருந்த சஷாங்கும், பவசங்கரும் அங்கு வந்து, சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குண்டு காயம் பட்ட இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அபிஷேக்கை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
லிபிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

