தேர்தலில் 'சீட்' வாங்கி தருவதாக மோசடி மத்திய அமைச்சரின் சகோதரர் மீது வழக்கு
தேர்தலில் 'சீட்' வாங்கி தருவதாக மோசடி மத்திய அமைச்சரின் சகோதரர் மீது வழக்கு
ADDED : அக் 19, 2024 01:10 AM
பெங்களூரு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் மற்றும் சகோதரி மீது, தேர்தலில் 'சீட்' வாங்கித் தருவதாகக் கூறி, 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசில் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருப்பவர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷி; கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
இவரது சகோதரர் கோபால் ஜோஷி, சகோதரி விஜயலட்சுமி ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் பெற்று தருவதாகக் கூறி, 2 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, மத சார்பற்ற ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ., தேவானந்த் பூல் சிங் சவானின் மனைவி சுனிதா, பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை கடந்த மார்ச்சில் ஹூப்ளியில் சந்தித்தேன். அப்போது நடக்க இருந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட, சீட் பெற்று தருவதாக அவர் உறுதியளித்தார். அதற்காக, 25 லட்சம் ரூபாயை பெங்களூரில் உள்ள தன் சகோதரியிடம் வழங்கும்படி கூறினார்.
அதன்படி, முதலில் 25 லட்சம் ரூபாயை தந்தேன். ஆனால், சீட் வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பித் தரும்படி கோபால் ஜோஷியிடம் கேட்டேன். அதற்கு அவர், தனக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைக்க இருப்பதாகவும்,
மேலும் 1.75 கோடி ரூபாய் வழங்கினால், 20 நாட்களில் மொத்த பணத்தையும் திருப்பி அளிப்பதாக கூறினார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தரவில்லை. கோபால் ஜோஷி மற்றும் அவரது சகோதரியை சந்திக்க முடியவில்லை. என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்; மோசடி செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
அவரது இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு போலீசார் நேற்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் மற்றும் சகோதரி மீது வழக்கு பதிந்தனர்.