ADDED : பிப் 16, 2024 07:04 AM

பெலகாவி: துப்புரவு தொழிலாளிக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளது. பெலகாவி மாநகராட்சி மேயராகி அசத்தி உள்ளார்.
பெலகாவி மாநகராட்சி கவுன்சிலர்கள் எண்ணிக்கை 58. கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பா.ஜ., 35 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பா.ஜ., சார்பில் ஷோபா சோமனாச்சே மேயராகவும், ரேஷ்மா பாட்டீல் துணை மேயராகவும் இருந்தனர்.
இவர்களின் ஓராண்டு பதவிக்காலம், கடந்த 5ம் தேதி முடிந்தது. இதையடுத்து புதிய மேயர், துணை மேயரை தேர்வு செய்ய 15ம் தேதி, தேர்தல் நடத்தப்படும் என்று, தேர்தல் அதிகாரி ஷெட்டன் அறிவித்து இருந்தார்.
போட்டியின்றி தேர்வு
அதன்படி மேயர், துணை மேயரை தேர்வு செய்ய, நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. மேயர் பதவி எஸ்.சி., சமூகத்திற்கும், துணை மேயர் பதவி பொது பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர்களில் யாரும், எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லாததால், மேயர் பதவிக்கு போட்டியிடவில்லை.
இதனால் பா.ஜ., சார்பில், மேயர் பதவிக்கு போட்டியிட்ட 17வது வார்டு கவுன்சிலர், சவிதா காம்ப்ளே, போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
துணை மேயர் பதவிக்கு, பா.ஜ., சார்பில் 44வது வார்டு உறுப்பினர் ஆனந்த் சவுகான், காங்கிரஸ் சார்பில் ஜோதி கடோல்கர் போட்டியிட்டனர். ஆனந்த் சவுகான் 39 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஜோதி கடோல்கருக்கு 20 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.
பா.ஜ., திட்டம்
மேயர் சவிதா காம்ப்ளே, கன்னடம் பேசுபவர்; துணை மேயர் ஆனந்த் சவுகான் மராத்தி மொழி பேசுபவர். லோக்சபா தேர்தலில் கன்னடம், மராத்தி மொழி பேசுபவர்கள் ஓட்டுகளை கவரும் வகையில், பா.ஜ., சிறப்பாக திட்டம் தீட்டி உள்ளது.
புதிய மேயர் சவிதா காம்ப்ளே, பெலகாவி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தார். பின்னர் ஹெல்மெட் தயாரிக்கும், தொழிற்சாலையில் வேலை செய்தார்.
கடந்த 2021ல் நடந்த தேர்தலில், அவருக்கு பா.ஜ., கவுன்சிலர் சீட் வழங்கியது. 'துப்புரவு தொழிலாளியாக வேலை செய்த மாநகராட்சியில், மேயராக பதவி ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என, அவர் கூறியுள்ளார்.