திருமணமான ஒரே மாதத்தில் மனைவி ஓட்டம் விதவைக்கு வாழ்வு கொடுத்தவர் பரிதவிப்பு
திருமணமான ஒரே மாதத்தில் மனைவி ஓட்டம் விதவைக்கு வாழ்வு கொடுத்தவர் பரிதவிப்பு
ADDED : மார் 15, 2025 11:29 PM
ஷிவமொக்கா: விதவைக்கு இளைஞர் வாழ்வு கொடுத்தார். ஆனால், அவரோ திருமணமான ஒரே மாதத்தில் கணவரை தவிக்க விட்டு ஓடினார்.
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியின் ஹொசகொப்பா கிராமத்தில் வசிப்பவர் மவுனேஷ், 28. இவருக்கு தாய், தந்தை, உற்றார், உறவினர் யாரும் இல்லை. சிறிதாக தொழில் செய்து வாழ்க்கை நடத்தினார்.
திருமணம் செய்து கொள்ள பெண் தேடியபோது, புரோக்கர் மூலமாக தீபிகா, 32, என்ற பெண் அறிமுகம் ஆனார்.
சிக்கமகளூரை சேர்ந்த தீபிகா, ஏற்கனவே திருமணமானவர்; ஒரு குழந்தையும் உள்ளது. 10 ஆண்டுளுக்கு முன்பு, இவரது கணவர் காலமானார். இதையறிந்த மவுனேஷ், விதவையான தீபிகாவுக்கு வாழ்வு கொடுக்க முன் வந்தார். இருவரும் பேசி திருமண தேதியை முடிவு செய்தனர்.
பிப்ரவரி 7ம் தேதி, நவுலேவில் உள்ள சவுடேஸ்வரி கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் தர்மஸ்தலா உட்பட பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். அன்யோன்யமாக வாழ்க்கை நடத்தினர்.
திருமணத்துக்கு முன்பே சிக்கமகளூரின் கலசா போலீஸ் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் பூர்னேஷ், 30, என்பவருடன் தீபிகாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
தீபிகா பெயரில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மீது கண் வைத்திருந்த பூர்னேஷ், இரண்டாவது கணவரை விட்டு வரும்படி தீபிகாவுக்கு மூளைச்சலவை செய்துள்ளார்.
மேலும், சில இளைஞர்களை ஏவி, மவுனேஷை தாக்கி கொல்ல முயன்றுள்ளார். அது தோல்வி அடைந்ததால், தீபிகாவை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டார்.
திருமணமான ஒரே மாதத்தில், மனைவி ஓடியதால் மவுனேஷ் மனம் நொந்துள்ளார். ஏ.எஸ்.ஐ., பூர்னேஷ் மீது, எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார். மனைவியை கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடுகிறார்.