ADDED : அக் 13, 2024 08:12 AM

லக்னோ : தன் இளம் மகளின் காதலால் விரக்தியடைந்து, அவரை கொலை செய்வதற்கு ரவுடியை ஏற்பாடு செய்தார் தாய். அந்த ரவுடிதான், அந்தச் சிறுமியின் காதலன். இறுதியில் மகளும், ரவுடியும் சேர்ந்து தாயைக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் எடாவாவைச் சேர்ந்தவர், அல்கா தேவி, 42. இவருடைய இளம் வயது மகள், அகிலேஷ் என்பவரைக் காதலித்து வந்தார்.
இதையடுத்து, தன் மகள் ஆசைகாட்டி கடத்தப்பட்டதாக, அல்கா தேவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி, அகிலேஷ் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தன் தாய் வீட்டுக்கு தன் மகளை அனுப்பி வைத்தார் அல்கா தேவி. அங்கு சுபாஷ் சிங், 38, என்பவருடன், அந்தச் சிறுமி பழகி வந்துள்ளார்.
இது அல்கா தேவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மகளின் காதல்களால், குடும்பத்துக்கு அவப் பெயர் ஏற்படுவதை அவரால் சகித்து கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, அந்த ஊரைச் சேர்ந்த ரவுடி ஒருவரைத் தொடர்பு கொண்டார். தன் மகளைக் கொலை செய்தால், 50,000 ரூபாய் தருவதாக கூறினார். ஆனால், அவருக்கு தெரியாது, அந்த ரவுடிதான், அவருடைய மகள் காதலிக்கும் சுபாஷ் சிங் என்பது.
இதைத் தொடர்ந்து சுபாஷ் சிங் மற்றும் அந்தச் சிறுமி, ஒரு திட்டம் தீட்டினர். கொலை செய்யப்பட்டதாக நாடகமாடி, அல்கா தேவியிடம் இருந்து பணம் கேட்டுள்ளனர்.
அவர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். தன்னைக் கொல்ல திட்டமிட்ட தன் தாயைக் கொலை செய்தால், திருமணம் செய்வதாக, சுபாஷ் சிங்கிடம் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அல்கா தேவியை கடத்தி, ரவுடியும், அந்தச் சிறுமியும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.