ADDED : செப் 21, 2024 06:47 AM
தொட்டபல்லாபூர்: நரகனஹள்ளி கிராமத்தில், மர்ம கும்பலின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர்.
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின் நரகனஹள்ளி கிராமத்தில் இரவு நேரத்தில் திருட்டுக் கும்பல், அவ்வப்போது அட்டகாசம் செய்கிறது. இரவில் உறங்கும்போது, மர்ம நபர்கள் கதவை தட்டிவிட்டு மாயமாகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, கிராமத்தின் பெண்ணொருவர், கழிப்பிடத்துக்குச் செல்லும்போது, பின்னால் இருந்து வந்த மர்ம நபர்கள், பெண்ணின் வாயை மூடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, இழுத்துச் சென்றனர்.
அவரது கழுத்தில் இருந்து, தங்க செயினை பறிக்க முயற்சித்தனர். அப்பெண் எதிர்த்துப் போராடியதால், அவரை தாக்கி, உடைகளை கிழித்து கீழே தள்ளிவிட்டுத் தப்பினர். சுய நினைவின்றி விழுந்திருந்த பெண்ணை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மர்ம நபர்களை கண்டுபிடிக்க, கிராமத்தினர் முயற்சித்தனர். கிராமத்தில் இரவு நேரத்தில், தெரு விளக்குகள் சரியாக ஒளிர்வது இல்லை. இது மர்ம கும்பலுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இரவில் வீடுகளில் திருட முயற்சிக்கின்றனர். எனவே கிராமத்தினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், வீடு ஒன்றின் கதவை தட்டினர். இதை பார்த்த அப்பகுதியினர், நபர்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த நபர்கள், பைக்கை விட்டு விட்டு தப்பிவிட்டனர். பைக்கை போலீசாரிடம் ஒப்படைத்து, புகார் செய்தனர்.
தொட்டபல்லாபூர் ஊரக போலீசார், நேற்று காலை வந்து ஆய்வு செய்தனர். மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.